மரபும் வழக்கும் மரபு முதியது; வழக்குப் புதியது; வழக்கின் முதிர்ச்சியே மரபு வழக்கு முதிர்ந்து செம்மை அழகு உண்மை பெற்றவிடத்து மரபாகும். “மரபு என்பது தொன்று தொட்டுவந்த வழக்கு'' என்றார் அரசஞ்சண்முகனார். நிலை நிறுத்திய வழக்கே மரபாகும். அது பழமையுடையது; தொன்னெறிமுறைமையுடையது. வழக்கிலுள்ளது வழக்கு. வழங்குமாற்றான் வழக்கெனப்படும். கற்றார் கல்லாதார் ஆகிய மக்கள் எல்லாராலும் பொருளுணர்ந்து பேசுமாறு எளிய சொற்களால் அமைந்த சிறந்த மொழிநடையே வழக்கு. மக்களிடையே பலமுறையும் பழகிய சொற்களாற் சிறப்பாக விரிந்து இயலும் இவ்வழக்கியன் மொழியினைச் சேரிமொழி என்பர் தொல்காப்பியனார். மரபு, இயல், விதி, இலக்கணம், நியதி, முறைமை, தன்மை, வழக்கு இவையெல்லாம் ஒரு பொருட்பன்மொழி எனினும் இலக்கணநூலாசிரியர்கள் வெவ்வேறு பொருளாற்றல் புலப்படப் பயன்படுத்தியுள்ளார்கள். நன்னூலார் பதம், சொல், மொழி, கிளவி என்ற ஒரு பொருட்சொற்களைப் பயன்படுத்திப் பல இலக்கணங்களை வகுத்தனர். மரபு என்ற சொல்லினைத் தொல்காப்பியர் தமது நாலெங்கணும் உபயோகித்தனர். அதற்கு ஒருவாற்றால் வரையறையுங் கூறினர். “மாற்றருஞ் சிறப...
Comments
Post a Comment